செவ்வாய், 13 டிசம்பர், 2022

இறைவாக்கினரின் குரலுக்கு செவி கொடுப்போம்! (10-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள்  இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இறைவாக்கினர்கள் நமது வாழ்வை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பலவற்றை எடுத்துரைத்தார்கள்.  அன்று இறைவாக்கினர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ்ந்தார்கள். சீராக்கின் ஞான நூலும்  இத்தகைய ஒரு சிந்தனையை நமக்கு வழங்குகிறது. கடவுளுக்கு உகந்த மனிதர்களாக வாழ்வதற்கான பல வழிகளை இந்த புத்தகமானது எடுத்துரைக்கிறது.  

            இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், மறைநூல் அறிஞர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களை பொருத்தவரை மெசியாவின் வருகைக்கு முன்னதாக எலியா இவ்வுலகத்திற்கு வருவார் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து எலியா தான் இந்த யோவான் என்பதை எடுத்துரைக்கின்றார்.  யோவான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்து, தவறிய வாழ்வு வாழ்ந்த மனிதர்களை எல்லாம் கடவுளை நோக்கி மனம் திருப்பக் கூடியவராக இருந்தார்.  இந்த யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்ட அதிகார வர்க்கத்தினர் அவரைக் கொன்றார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,  இந்த யோவானை எலியாவோடு ஒப்பிட்டு காண்பித்து,  இயேசுவே மெசியா  என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக் காட்டக் கூடியவராக இருந்தார்.

       இந்த இயேசுவின் வாழ்வும் இறைவாக்கினர்களின் வாழ்வும் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், நமது வாழ்வு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு ஆண்டவருக்கு உகந்த மனிதர்களாக நாளும் வளர ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.   இறைவன் தொடர்ந்து நம்மை
 ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...