வியாழன், 29 டிசம்பர், 2022

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர்! (27-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டிருந்த சீடர்களுள் ஒருவராக யோவானை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த யோவானை நினைவு கூர திரு அவை இன்று நமக்கு அழைப்பு தருகிறது. ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட போது, தான் செய்து கொண்டிருந்த மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடி வந்தவர். இயேசு அழைப்பதற்கு முன்னதாகவே திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு, தன் வாழ்வை மாற்றிக் கொண்டு மனமாற்றம் பெற்றவராக திருமுழுக்கு பெற்றவர். இந்த திருமுழுக்கு யோவான்,  இதோ இறைவனின் செம்மறி என்று அடையாளம் காட்டிய போது,  இயேசுவை அறிந்தவராக இருந்தாலும், இயேசு  அழைத்தபோது உடனடியாக ஓடிச் சென்று அவரது பணிக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர். இயேசுவோடு உடன் பயணித்தவர்.
 சிலுவையில் இயேசு தொங்குகிற போது கூட, சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்த நபராக இந்த யோவானை நாம் விவிலியத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
                        தன் வாழ்நாள் முழுவதுமே ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவராக, தான் அன்பு செய்த ஆண்டவர் மீதான நம்பிக்கையில் அனுதினமும் வேறூன்றிய ஒரு நபராக நம்பிக்கையோடு  ஆண்டவரின் வார்த்தைகளை துணிவோடு எடுத்துரைத்து சான்று பகருகின்ற மனிதனாக தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டவர். 
   இந்த புனிதரை நினைவு கூருகின்ற இந்த நன்நாளிலே ஆண்டவர் மீது அதிகமான அன்பு கொள்ளக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு நமக்கு தரப்படுகிறது. நம்மை தேடி வந்த இறைவனை நாம் உணர்ந்து கொண்டு, அவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக்கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுள் மீதான அன்பில் நாளும் வளரவும் அந்த அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளவும், இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...