புதன், 15 ஜூலை, 2020

"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்" ஜூலை - 16


"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்"

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகம்   நமக்கு உணர்த்தும் பாடமாக "நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மையமாகக்கொண்டு என் சிந்தனைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன். 

இயேசு இம்மண்ணில்  வாழ்ந்த போது சமூகத்தில் துன்பத்தில் வாடிய பலருக்கு இளைப்பாறுதல் தந்தார் என்பதில் துளியளவும் மாற்றுக்கருத்து இல்லை என்பதை நாம் அறிவோம் ...  

இயேசுவின் பணியை செய்ய முன்வந்துள்ள நாம் இன்று யாருக்கு இளைப்பாறுதல் தந்து கொண்டிருக்கிறோம்? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இன்று நாம் வாழும் உலகில் நம்மில் பலர் எப்போதும் அடுத்தவரின் ஆறுதலை பெறுவதற்கும், அடுத்தவரின் நிழலில் இளைப்பாறுதல் அடையவும் விரும்புகிறோம்.

ஆனால் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது இளைப்பாறுதலை தேடினார் தனக்காக அல்ல அடுத்தவருக்காக...

 சமூகத்தில் யூதர்களால் பிற இனத்தார் என ஒதுக்கி வைக்கப்பட்டும், தீண்டத்தகாதவர்கள் எனக்கூறி தொழுநோயாளர்களை ஒதுக்கிவைத்து வாழ்ந்துவந்த சமூகத்தில் அவர்களுக்கு ஆறுதலும், இளைப்பாறுதலும் தந்தவர் இயேசு. 
 இச்சமூகத்தில் உள்ள  மனிதர்கள் மனிதர்களை மதிக்க வேண்டும், அவர்களை ஒதுக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு மனிதநேய அடிப்படையில் ஒருவர் மற்றவருக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியவர் இந்த இயேசு...
இயேசு தான் சொன்னதை தன் செயலில் காட்டினார் என்பதை விவிலியத்தில் பல சான்றுகள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். (இயேசு பலரை குணப்படுத்திய நிகழ்வுகள்)

அன்று அவர் செய்ததையும், சொன்னதையும் இன்றைய நாளில் நமக்கு நினைவூட்டும் வண்ணமாக இன்றைய நற்செய்தி  வாசகத்தின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சரிசெய்துகொள்ள அழைக்கப்படுகிறோம்... 

இன்று நாம் வாழும் சமூகத்தில் சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும், இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஒருவர் மற்றவரை ஒதுக்கி வாழக்கூடிய இச்சூழலில்...நாம் பார்க்க வேண்டியது மனிதத்தை என்பதை உணர்ந்தவர்களாக மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தரக்கூடிய இயேசுவாகவும் அவரின் சீடர்களாகவும் இச்சமூகத்தில் வலம்வர இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்...

"நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்ற  இன்றைய நாளில் துணிவோடு தொடர்ந்து மனிதத்தை நேசிக்கும் மனிதர்களாக ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தரும் இயேசுவின் சீடர்களாக உரு மாறுவோம் ...

"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்"

2 கருத்துகள்:

  1. இன்றைய கருத்துகள் மனதைத் தொடுவதாக உள்ளன. மிகவும் அருமை. மனிதர்களாக வாழ அழைப்பு. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய படம் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...