புதன், 14 செப்டம்பர், 2022

திருச்சிலுவை மகிமையோடு உயர்த்தப்பட்ட விழா ! (14-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


        இன்று தாய்த்திரு அவையானது திருச்சிலுவையை  மகிமைப்படுத்துகின்ற விழாவை  கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. மனித வரலாற்றை நாம் திருப்பி பார்க்கிற போது,  பல நிலைகளில் மனிதன் அடிமைப்பட்டு கிடந்த போது, இந்த மனிதனை மீட்டு வருவதற்காக கடவுள் பல வழிகளை கையாண்டார். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரேல் மக்களை அழைத்து வந்தவர் கடவுள்.  தங்களை அழைத்து வந்த கடவுளை புறம் தள்ளிவிட்டு தங்கள் மனம் போன போக்கில் வாழ முயன்ற போதெல்லாம், பலவிதமான துன்பங்கள் வழியாக, கடவுள் அவர்களுக்கு  தனது உடன் இருப்பையும், தன்னையும் வெளிப்படுத்தக் கூடியவராக, கடவுள் இருந்தார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிகிறோம். 

   ஒரு கட்டத்தில்,  மனிதன் தவறுவது இயல்பு என்பதை உணர்ந்தவராய் இந்த மண்ணில் மனிதனாக வந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வால் வாழ்ந்து காண்பித்து,  நமக்கு முன் உதாரணமாக அனைத்திற்கும் அடிப்படையாக, சிலுவை மரணத்தை ஏற்று,  நம்மை பாவத்திலிருந்து மீட்டார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 

     இந்த  ஆண்டவர் இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை, நம்பிக்கையோடு பயன்படுத்துகிற போது, நோக்குகிறபோது, பலவிதமான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை வரலாற்றின் துணை கொண்டு நாம் அறிய முடிகிறது. 312ம் ஆண்டுகளில் கான்ஸ்டன்ட்டைன் மன்னன் போர் தொடுத்துச் செல்லுகிற போதெல்லாம், சிலுவை வரையப்பட்ட கொடியினை சுமந்து சென்றார். அதன் விளைவாக போரில் வெற்றி அடைந்தார். ஏறக்குறைய இந்த வெற்றிகளுக்கு பிறகாக,  அவர் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அறிவித்தார். 


13 ஆம் நூற்றாண்டுகளில் கான்ஸ்டன்ட்டைன் மன்னனுடைய தாயானவர்,  கல்வாரி மலைக்குச் சென்று, இயேசு அறையப்பட்ட சிலுவையை தேடினார். ஏறக்குறைய மூன்று சிலுவைகளை அவர் கண்டுபிடித்தார். அதில் எது இயேசு அறையப்பட்ட சிலுவை என்ற கேள்வி அவருக்குள் எழுந்த போது,  கை சூம்பிய ஒரு மனிதனை அழைத்து வந்து, மூன்று சிலுவைகளையும் தொடச் சொன்னார். அப்படி அவன் தொட்ட போது, ஒரு சிலுவையைத் தொட்ட மாத்திரம் அவனது கை நலம் பெற்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அதுவே ஆண்டவர் இயேசு அறையப்பட்ட சிலுவை என்று கூறி, அந்த சிலுவையை எடுத்துச் சென்று உரோமையில் ஆலயம் ஒன்றை நிறுவி அதனை அங்கு வைத்தார்.

        எனவேதான் ஒவ்வொரு மாதமும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்த திருச்சிலுவை நிறுவப்பட்ட தினத்தினை நினைவுகூர்ந்து கொண்டாடிட, திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது.‌ இந்த நல்ல நாளில், நாமும் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். இந்த சிலுவை நமக்கு கற்றுத் தருகின்ற வாழ்வுக்கான பாடங்களை உணர்ந்து கொள்வோம். இந்த சிலுவை மரணத்தை ஏற்க இறைவன் திருவுளம் கொண்டார். நமது வாழ்வில் துன்பங்களை ஏற்க, அத்துன்பங்களின் வழியாக, நாம் இறைவனை இன்னும் ஆழமாக கண்டுகொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 





                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...