சனி, 3 ஜூன், 2023

நீங்கள் என் மீது அன்பு கொண்டு என்னை நம்பினீர்கள்! (20-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

             இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இயேசுவின் பெயரால் நாம் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வோம் என்ற வாக்குறுதியை இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் பெயருக்கு வல்லமை உண்டு. இந்த இயேசுவின் பெயரால் தான் முடக்குவாதமுற்றிருந்த ஒரு மனிதனை பேதுரு எழுந்து நடக்க வைத்தார். "என்னிடம் பொன்னும் இல்லை பொருளும் இல்லை. ஆனால் என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் சொல்கிறேன் எழுந்து நட" என்று சொல்லி இயேசுவின் பெயரால் குணப்படுத்திய பேதுருவைப் போல இயேசுவின் பெயருக்கு வல்லமை உண்டு என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளின் துணையோடு இயேசுவின் வழியாக நாளும் நாம் நம் தேவைகளை இறைவனிடத்தில் எடுத்துரைக்க அழைக்கப்படுகிறோம்.

           இயேசுவின் பெயரால் தேவைகளை எடுத்துரைக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவைப்போல இச்சமூகத்தில் வாழ வேண்டும். அவர் எப்படி இந்த சமூகத்தில் வாழுகிற போது அனைவரையும் மதித்து, மதிப்போடு எது நீதியோ அறிவிக்கின்றவராகவும் பின்பற்றுகிறவராகவும் இருந்தாரோ, அவரைப்போல நாமும் இருக்க வேண்டும். எப்போது இயேசுவைப்போல நமது செயல்பாடுகள் அமைகிறதோ அப்போதெல்லாம் இயேசுவின் பெயரால் நாமும் பல அற்புதங்களையும்,  அடையாளங்களையும் இந்த மண்ணில் செய்ய முடியும் என்பதை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் பெயரால் இணைந்திருக்கின்ற, ஒன்று கூடுகின்ற நாம் ஒவ்வொருவருமே இன்னும் அதிகமாக இயேசுவின் பெயரில் நம்பிக்கை கொண்டு வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...