வெள்ளி, 16 அக்டோபர், 2020

மதங்கள் .......... இதற்கு வழிவகுப்பதில்லை. (17.10.2020)

தூய ஆவியானவர் நமக்கு ஞானத்தை வழங்குகிறார்! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் வழியாக கடவுள் நமக்கு தரக்கூடிய கேள்வி ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் தூய ஆவியானவரை வழங்கியிருக்கிறார். அந்தத் தூய ஆவியார் ஞானத்தைத் தந்து கொண்டிருக்கிறார்.ஆனால் இன்றைய நாளில் கடவுள் நம்மிடம் எழுப்பும் கேள்வி, கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கை தந்துள்ளது? என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்பி பார்க்க அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து  அவரை பின்தொடரக் கூடிய  சீடர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்திக்க கூடிய வகையில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம்மிடையே உரையாற்றுகிறார். மக்கள் முன்னிலையில் கடவுளை ஏற்றுக் கொள்பவர்களை கடவுளும் ஏற்றுக்கொள்கிறார். மக்கள் முன்னிலையில் கடவுளை ஏற்காதவர்களை அவரும் ஏற்பதில்லை.

 தொடக்கத் திருஅவையில் பார்க்கும் போது பலவிதமான இன்னல்களை தொடக்ககால கிறிஸ்தவர்கள் சந்தித்தார்கள். பவுல் என்பவர் சவுலாக இருந்த போது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம் கண்டு பிடித்துஅவர்களைக் கொலை செய்யவும் சிறையில் அடைக்கவும் பொறுப்பை பெற்றுக்கொண்டு தமஸ்கு நகர் நோக்கி பயணப்பட்டார் என விவிலியத்தில் நாம் அறியலாம்.

தொடக்க காலத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருமே பலவிதமான இன்னல்களை  அடைந்தார்கள். பல நேரங்களில் அவர்கள் இயேசுவ மறுதலித்தார்கள். ஆனால் பலர் உயிரே போகும் நிலை வந்தாலும்தாங்கள் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் என்று கூறி இயேசுவுக்காக உயிர் துறந்தார்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் மதம் என்பதை எதன் அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்? என சிந்திப்போம். பல மதங்கள் இவ்வுலகில் இருந்தாலும் அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே. அடுத்தவருக்கு உதவி செய். பகைவரையும் அன்புசெய். மன்னித்து வாழ். எப்போதும் மகிழ்ச்சியாக இரு. இறைவன் அன்புமயமானவர். அதே இறைவன் தவறுகளின் போது நம் மீது கோபம் கொள்கிறார். அதேசமயம் தவற்றிலிருந்து நாம் மீண்டு வரும்போது , நம்மைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு  தான் அனைத்து விதமான மதங்களும் வெவ்வேறு விதமான வார்த்தைகளின் வழியாக அன்பை போதிக்கின்றன. ஆனால் இந்த மதங்கள் அனைத்துமே, 
ஒரு மனிதன் மகத்துவமான வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக உள்ளன. 

 ஆனால் நாம் இந்த மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.மதங்கள் போதிப்பதை வெறும் போதனையாக மட்டுமே பார்க்கிறோம்.  அவற்றை உள்மன அளவில் ஏற்றுக் கொண்டு செயல்பட நாம் முன்வருவதில்லை.
எப்போது நாம் மதங்கள் கூறக்கூடிய கருத்துக்களை வாழ்க்கை பாடமாக கருதி நமது வாழ்வை மாற்றிக் கொள்கிறோமோ, அப்போதுதான் நாம் கடவுளை உண்மையாக ஏற்றுக்கொண்டவர்களாவோம். அவ்வாறு செயல்படும் போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வார். அவ்வாறு நாம் செயல்படாத நேரங்களில் மதப்பற்று உடையவர்களாக நாம் இருந்தாலும் நம்மிடம் இருக்கக்கூடிய மதப்பற்று நம்மை மதம் பிடித்து ஆட்டாத வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் எத்தகைய மதப்பற்றைக் கொண்டிருந்தாலும்,  அதில் இறைவன் நாட்டம் கொள்வதில்லை. மதங்களின் உண்மையான நோக்கம் நல்ல வாழ்வை, நல்ல மனிதர்களை, மனிதநேயமிக்க மனிதர்களை, இச்சமூகத்தில் உருவாக்குவது மட்டுமே! மாறாக மனிதநேயமற்ற மனிதர்களை உருவாக்குவது அல்ல.  ஆனால் இன்று மதத்தின் பெயரால் மனித நேயமற்ற செயல்களில் நாம் பல நேரங்களில் ஈடுபடுகிறோம். அத்தகைய நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட்டு நம்மை நாம் சரி செய்து கொண்டு வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.


 ஒரு காட்டில் இரண்டு புறாக்கள் வாழ்ந்து வந்தன. கோடைகாலம் என்பதால் அந்த காட்டில் இருந்த நீர்நிலைகள் அனைத்தும் காய்ந்து போயின. எனவே நீர்நிலையை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தன. அவர்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய காட்டிலிருந்து ஒரு பாலை வனப் பகுதியை
கடந்து தான் அவர்கள் மறு காட்டை அடைய முடியும். எனவே இரண்டு பறவைகளும் பறக்கத் தொடங்கின. பறக்கும் போது இவ்வாறு தங்களுக்குள் சசிந்தித்துக்கொண்டன. பாலை நிலம் என்பதால் அதில் எப்படி அமர்ந்து ஓய்வெடுப்பது? அங்கு அமர்ந்து ஓய்வெடுக்க இயலாதே! வெயிலின் தாக்கத்தால் நாம் இறந்து விடக்கூடும்,
என்ன செய்யலாம் என சிந்தித்தன. அப்போது இரண்டு புறாக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு, ஒரு புறா மேலே பறக்கும் பொழுது, அதன் நிழலில் இன்னொரு புறாவும் அதன்பிறகு நிழலில் இருந்த புறா மேலும், மேலே இருந்த புறா  இப்போது மற்றொரு புறாவின் நிழலிலுமாக, இரண்டு புறாக்களும் பாலைவனத்தை கடந்து, அருகாமையில் இருந்த மற்றொரு காட்டை அடைந்து.  தங்களின் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தன.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்திலும், மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்து இருக்கும் நிலையில் கடவுள் என்பவரை வெவ்வேறு வடிவத்தில் காணகூடியவர்களாக இருக்கிறோம். அனைத்து கடவுள்களும் நமக்குச் சொல்லித் தரும் பாடம், மனிதநேயத்தோடு, மண்ணில் வாழ வேண்டும் என்பது. மனித நேயத்தோடு இவ்வுலகில் வாழவேண்டும் என்றால்

 சகமனிதர்களின் துன்பத்தை கண்டு காணாமல் இருப்பது அல்ல. அவன் துன்பத்தில் பங்கு எடுத்து துன்பத்தைத் துடைக்க, நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வது ஆகும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் போது நாம் மனிதநேயமிக்க நல்ல மனிதர்களாக நாம் உருமாறுவோம் . அப்போது இறைவன் நம்மை அனைவர் முன்னிலையிலும் என்னுடைய பிள்ளைகள் என்று ஏற்றுக் கொள்வார்.
எனவே அந்த இறைவனின் பிள்ளைகளாக நாம் மாறுவதற்கு அவரைப் பின் தொடர்கிறேன் என வார்த்தைகளால் நாம் கூறுவதை விட, நமது செயல்களால் நாம் உண்மையான மனித நேயமுள்ள கடவுளின் உண்மை சீடர்கள்  என்பதை இச் சமூகத்தில் நிலைநாட்டிட நமது வாழ்வை மாற்றிக்கொண்டு பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

 மதங்கள்  எதற்கு   வழிவகுப்பதில்லை?

2 கருத்துகள்:

  1. "மதப்பற்று நம்மை மதம் பிடிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்."
    அருமையான வரிகள்.. 👌
    நன்று சகோ. 👏
    வாழ்த்துகள். 🙏

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...