புதன், 2 நவம்பர், 2022

இறைவன் தரும் அழைப்பை வாழ்வாக்குவோம்! (20-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது நமக்குள்ளாக உறைந்து இருக்கின்ற உன்னதமான இறைவனை உணர்ந்து கொள்வதற்கான அழைப்பை நமக்கு தருகின்றன. 

இறைவன் குடி கொண்டிருப்பது நம்முள்.  அவரது வார்த்தையின் வாயிலாக, நம்முள் இருந்து எப்போதுமே செயல்படக்கூடிய ஒரு நபராகவே கடவுள் இருக்கிறார். இந்த ஆண்டவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது அன்பை மையப்படுத்தினார். அந்த அன்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக பாகுபாடுகளை எல்லாம் களைந்தவர்களாக, பார்க்கிற ஒவ்வொரு மனிதரையும் அன்பு செய்யக்கூடியவர்களாக, ஆண்டவர் இயேசுவைப் போல இச்சமூகத்தில் நீங்களும் நானும் வாழ்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை நமக்கு தருகிறது. 

பல நேரங்களில் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல, நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளுகிற போது, இந்த இந்த மண்ணில் இயேசுவைப்போல தீ மூட்ட வந்தவர்களாகவே நாம் இருப்பதாக பலரும் உணர்ந்து கொள்வது உண்டு. 

ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க துவங்குகிற போது, எதிர்ப்புகளை எங்கிருந்தோ சந்திப்பதில்லை. குடும்பங்களில் இருந்து தான் முதலில் சந்திக்கத் துவங்குகிறோம். குடும்பங்களில் இருந்து தான் நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் விமர்சிக்கப்படுகின்றன. 

ஆனால் நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதால் , உறவுகளால் புறம் தள்ளப்பட்டாலோ, வெறுக்கப்பட்டாலோ, நம்மை என்றும் வெறுக்காமல் ஏற்றுக் கொண்டு, நம்மை அரவணைக்கக் கூடியவராக ஆண்டவர் இருக்கிறார். 

இந்த ஆண்டவர் மட்டுமே நிலையானவர். இவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவது மட்டுமே நமது வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் இச்சமுகத்தில் தொடர்ந்து பணியாற்ற இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. 

இந்த இறை வார்த்தையின் அழைப்புக்கு ஏற்றார் போல, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான ஆற்றலை வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...