வெள்ளி, 25 டிசம்பர், 2020

மீட்புப் பெறுவர் யார்?! (26.12.2020)

 மீட்புப் பெறுவர் யார்?!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

இன்று நாம் திருஅவையின் முதல் மறைசாட்சியாகிய புனித ஸ்தேவானின் திருவிழாவினை சிறப்பிக்கின்றோம். "வேத சாட்சிகளின்  இரத்தம் திரு அவையின் வித்து என்று கூறுவார்கள்". ஒரு விதை எந்த அளவிற்கு வீரியம் உள்ளதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய பலன்கள் மிகவும் சிறந்ததாக இருக்கும். 
       
             ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை நாம் எண்ணி விடலாம். ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பதை நம்மால் கணிக்க முடியாது என்பார்கள். அவ்வாறே திருஅவையில் இருக்கின்ற புனிதர்களை நாம் இன்று நாம் எண்ணி விடக் கூடும். ஆனால் ஒரு புனிதருடைய  புனிதத்தின் அளவினையும் அவரது புனிதமான வாழ்வின் வெளிப்பாடுகளையும் நம்மால் வரையறுக்க இயலாது. 
              அவ்வாறே, இன்று நாம் நினைவு கூறும் புனித ஸ்தேவானும், தன்னை சுற்றி நின்ற கூட்டத்தினரின் கீழான பேச்சுகளுக்கு அஞ்சாமல் தான் காட்சியில் கண்ட இறைவனை, அவரது வல்லமையை, ஞானத்தை, எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறார். 

           இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் எச்சரிக்கையாக வாழ நம்மை அழைக்கின்றார். இறைவனின் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் நம்மை இழுத்துச் செல்வார்கள். சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். நமது மன வலிமையை இழக்கச் செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாம் அத்தகையோரிடம் பேச வேண்டிய காரியங்கள் குறித்து தூய ஆவியானவர் வழியாக நமக்கு அருள் ஏற்படும் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்க பெறுவர் என்பது இன்றைய வாசகத்தின் இறுதியான உறுதியான வாசகமாக அமைந்துள்ளது.  

                    சங்கடங்களும் சவால்களும் நிறைந்த இவ்வுலகில் எந்த ஒரு மனிதரும் இவற்றில் இருந்து தப்பிவிட இயலாது. எத்தகைய மனிதர் ஆனாலும் சவால்களை சந்தித்தே வாழ்க்கையை நிறைவு செய்ய இயலும். இவ்வாறு சவால்களை சந்திக்கின்ற பொழுது நமது சுயநலத்தை விடுத்து, பிறரது நீதியான செயல்களை முன் நிறுத்தும் பொழுது, நாம் சந்திக்கும் சவால்களை வெற்றியுடன் அணுக இறை வல்லமை நம்மை வலுப்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் எதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்பதை தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவதாக நம்மை பலப்படுத்தும் நம்பிக்கை வார்த்தைகளை ஆண்டவர் இயேசு வெளிப்படுத்துகின்றார். 
                  இவ்வாறு நமது நம்பிக்கை ஆண்டவரில் ஆழப்படுகின்ற பொழுது, நாம் இறுதிவரை மன உறுதியுடன் செயல்பட முடியும். இன்று நாம் விழா காணும் புனித ஸ்தேவானைப் போல, மன உறுதியுடன் இறை அனுபவத்தில் ஆழப்பட, ஒவ்வொரு நாளும் உள்ளத்தில் உறுதிபெற இறை ஞானத்தால் வாழ்வு பெற நமக்காக பிறந்திருக்கும் பாலன் இயேசுவின் இறையருளை வேண்டுவோம்...

1 கருத்து:

  1. புனிதர்களின் பாதையில் வழி நடந்து, ஆண்டவர் இயேசுவின் ஞானத்தால் நிறைந்து, அவரின் அன்பு மக்களாக வாழ்ந்திட நம்மை அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...