வெள்ளி, 3 மார்ச், 2023

வார்த்தைகளை வாழ்வாக்குவதே வாழ்வின் இலக்கு! (29-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
                  இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் எத்தகைய ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றன. ஆண்டவர் இயேசுவின் மலைப் பொழிவை இன்று நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசு கூறிய இந்த மலைப்பொழிவின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்கிற போது, அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்கின்றவர்களாக நாம் இருப்போம் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 இன்றைய முதல் வாசகம் ஏழைகளை கடவுள் நம் மத்தியில் விட்டு வைத்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது. இந்த ஏழைகளோடு இணைந்த வாழ்வு என்பது அவர்களின் வாழ்வு நெறிப்பட வேண்டும், அவர்களின் வாழ்வும் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இவர்களை ஏழைகள் எனப்புறம் தள்ளினாலும் அவர்களை கடவுள் அழைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்.  மண்ணில் வாழுகிற ஒவ்வொரு உயிருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. இந்த உலகம் ஒதுக்கி தள்ளுபவர்களைக் கூட அரவணைப்பவர்களாகத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். இந்த ஆண்டவர் இயேசுவை பின்பற்றக் கூடிய நாம் ஒவ்வொருவருமே  அவரின் மலைப்பொழிவை மனதில் இருத்தியவர்களாக நமது வாழ்வில் ஏழைகள் மீது அக்கறை கொண்ட ஒரு வாழ்வாகவும் நீதியை பின்பற்றுகின்ற ஒரு வாழ்வாகவும், நீதிக்காக துன்புறுகின்ற மனிதர்களாகவும், எப்போதும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக தொடர்ந்து செயலாற்றிட இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...